கடந்த ஆகஸ்ட் 23-29 தேதிகளில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தியா
ஆகஸ்டு 23: அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய நலன்களுக்கான சிறப்புத் தூதராகவும் செர்ஜியோ கோரை நியமித்தார்.
ஆகஸ்டு 24:
மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ரவுலியில் உள்ள நிலக்கரிச் சுரங்கப் பகுதியில் அரிய மண் தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தியா தலைமையிலான சர்வதேசப் பெரிய பூனைகள் அமைப்பில் (ஐ.பி.சி.ஏ.) அண்டை நாடான நேபாளம் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இந்த அமைப்பு, 7 பெரிய பூனை இனங்களைப் பாதுகாக்க 90-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பலதரப்பு அமைப்புகள் அங்கம் வகிக்கும் கூட்டணியாகும்.
பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளுக்காகப் பெண் கமாண்டோக்களைக் கொண்ட தனிப்பிரிவை உருவாக்க மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை திட்டமிட்டுள்ளது.
ஆகஸ்டு 25: தூத்துக்குடியில் 2029-ம் ஆண்டு பசுமை ஹைட்ரஜன் மையம் திறக்கப்படும் என மத்திய துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து நீர்வழித்துறைச் செயலாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
ஆகஸ்டு 26: இந்திய வரலாற்றில் முதல்முறையாக, முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட உதயகிரி, ஹிமகிரி ஆகிய 2 போர்க்கப்பல்கள் ஒரே நாளில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.
ஆகஸ்டு 27: மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆலோக் அராதே மற்றும் பாட்னா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர்.
ஆகஸ்டு 28: நாடு முழுவதும் 2024-25-ம் கல்வியாண்டில் பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை முதல்முறையாக 1 கோடியைக் கடந்திருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகம்
ஆகஸ்ட் 23: கேழ்வரகு உற்பத்தியில் தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது.
ஆகஸ்ட் 25: தேசிய நல்லாசிரியர் விருதுகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ரேவதி பரமேஸ்வரன், வி.விஜயலட்சுமி, மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த வி.ரெக்ஸ் (எ) ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதே நாளில், சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கான அனைத்துச் சேவைகளையும் வாட்ஸ்அப் மூலம் பெறும் திட்டத்தை மேயர் தொடங்கி வைத்தார்.
ஆகஸ்ட் 26: தமிழகத்தில் 2,430 நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
அறிவியல்
ஆகஸ்ட் 23:
சிறிய ரக செயற்கைக்கோள் ஏவுதளம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சிறிய வகை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக எஸ்.எஸ்.எல்.வி. (SSLV) ரக ராக்கெட்டுகளைத் தயாரித்து வருகிறது. இந்த ராக்கெட்டுகளை ஏவுவதற்காக, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் புதிய ஏவுதளம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஏவுதளத்திலிருந்து எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுடன் தனியார் நிறுவன ராக்கெட்டுகளையும் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இந்திய விண்வெளி நிலையம்: இந்தியா 2035-ம் ஆண்டுக்குள் பூமியில் இருந்து 450 கி.மீ. தொலைவில் விண்வெளி நிலையத்தைக் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான முதல் தொகுப்பு 2028-ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அடுத்தடுத்து 4 தொகுப்புகள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு, அவை ஒன்றாக இணைக்கப்பட்டு இந்திய விண்வெளி நிலையம் செயல்படத் தொடங்கும்.
ஆகஸ்ட் 24:
ககன்யான் திட்டம்: விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்காக, பாராசூட் சோதனை ஹரிகோட்டாவில் வங்கக்கடலில் வெற்றிகரமாக முடிந்தது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
வான் பாதுகாப்பு அமைப்பு: இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கடற்கரையில் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு கவச சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. போர் ஏற்பட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு வான் பாதுகாப்பு அமைப்பு முக்கியமானது.
பொருளாதாரம்
ஆகஸ்டு 23:
ஆகஸ்டு 15 அன்று முடிந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 69,510 கோடி டாலராக உயர்ந்தது.
உலகளாவிய நிச்சயமற்ற சூழல் இருந்தபோதிலும், ஜூலை மாதத்தில் இந்தியாவின் முக்கிய ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதி 5.37% அதிகரித்துள்ளது.
ஆகஸ்டு 28:
ஜூலை மாதத்தில், தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு எண் (IIP) 3.5% ஆகப் பதிவாகியுள்ளது. ஜூன் மாதத்தில் இது 1.5% ஆக இருந்தது.
ஆகஸ்டு 29:
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல்-ஜூன் மாதங்களில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8% வளர்ச்சி அடைந்துள்ளது.
ஜூன் காலாண்டில் இருசக்கர வாகன விற்பனையில் தமிழ்நாடு 3-ம் இடத்தில் உள்ளது.
உலகம்
ஆகஸ்டு 29 : டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா-ஜப்பான் இடையேயான 15-வது வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் முதலீட்டாளர்களை இந்தியாவில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.
விளையாட்டு
ஆகஸ்ட் 23:
கஜகஸ்தானின் ஷிம்கென்ட்டில் நடைபெற்ற 16-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் பபுதா-இளவேனில் ஜோடி, சீனாவின் டிங்கி லூ-ஜின்லு பெங் ஜோடியைத் தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றது.
கனடாவின் வின்னிபெக்கில் நடைபெற்ற உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப்பில், ஆடவர் 21 வயதுக்கு உட்பட்டோர் காம்பவுண்டு பிரிவில் குஷால் தலால், மிஹிர் நிதின், கணேஷ் மணிரத்தினம் ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதிச் சுற்றில் ஜெர்மனியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது.
ஆகஸ்ட் 24:
பூடான் தலைநகர் திம்புவில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட தெற்காசிய மகளிர் கால்பந்து போட்டியில் இந்திய அணி பூடானை வீழ்த்தி, மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது.
ஆகஸ்ட் 25:
ஆமதாபாத்தில் தொடங்கிய 30-வது காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில், பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு, 'ஸ்னாட்ச்' முறையில் 84 கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 109 கிலோவும் என மொத்தம் 193 கிலோ எடைதூக்கி புதிய சாதனை படைத்ததுடன், தங்கப் பதக்கத்தையும் வென்றார்.
No comments:
Post a Comment